Monday, August 9, 2010

கண்ணியமிக்க மார்க்க சொந்தங்களே....


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காதுஹு
1990 ஆண்டுகளில் இந்துத்துவ பயங்கர அமைப்புகளால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட பல்வேறு கலவரங்களால் பாதிப்புக்குள்ளான சமுதாயத்தின் கண்ணியங்காக்க தன்னெழுச்சியாய் புறப்பட்ட நம் சமுதாய இளைஞர்கள் இவ்வாண்டு (2010) வரை தொடர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். காவல்துறை, நீதித்துறை மற்றும் ஆளும் அரசாங்கத்தின் பாரபட்சமான போக்கினால் தொடர் வதைகளுக்கு ஆளாகிவரும் இளைஞர்களை விடுவிக்கும் பணியிலும் அவர்தம் குடும்பத்தினரைக் காக்கும் பொறுப்பிலும் ‘சிறுபான்மை உதவி அறக்கட்டளை’ தன்னை அர்ப்பணித்து வருகின்றது. அல்ஹம்து லில்லாஹ்.

இவ்வமைப்பு 2001 ஆம் ஆண்டு ஒருசில சிறைவாசிகளின் இல்லாத்களைக் கொண்டு அரசு பதிவுபெற்ற அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டது. (பதிவு எண்- 882-2001) இன்றளவும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில சகோதரர்களே இதற்கான களப்பணியை ஆற்றி வருகிறார்கள். இருப்பினும் எண்ணற்ற ஈர நெஞ்சங்களின் குன்றா உதவிகளால்தான் இவ்வமைப்பின் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.
பெருஞ்செல்வந்தர்கள் முதற்கொண்டு சாதாரண கூலித் தொழிலாளிகள் வரை இப்பணிகளுக்கு தம்மால் இயன்ற ஒத்தாசைகளை வழங்கி வருகிறார்கள். ஒப்பற்ற அவர்தம் உதவி ஒத்தாசைகளால்தான் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் இருந்து வதைபட்டுவந்த சிறைச் சகோதரர்கள் விடுதலையாகி உள்ளார்கள்.

இப்பேருதவியை தொடர்ந்து அளித்துக்கொண்டுள்ள நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை என்றென்றும் நவின்று கொண்டுள்ளோம். அவர்களுக்காக உளப்பூர்வமான துஆக்களையும் செய்து கொண்டுள்ளோம்.

நிறைவேறாமல் தொடரும் இப்பணிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேயாகவேண்டும் என்பதற்காக மீண்டும் உங்கள் தலைவாசல் தேடி வந்துள்ளோம். அதிகபட்சமாய் 13 ஆண்டுகளுக்கும் மேலாய் சிறைகளில் வாடிவதங்கும் நம் 55 இஸ்õமிய சகோதரர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் அவர்களுடைய வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய் மேல்முறையீடு செய்து வழக்காட வேண்டும்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு 24 சகோதரர்கள் விடுதலையாகி உள்ளனர் என்பதை உங்களுடைய கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

இவ்வழக்கில் 18 சகோதரர்களின் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாக வேண்டும். நிதிப் பற்றாக்குறையால் மேல் முறையீடு தாமதமாகிக் கொண்டே செல்கின்றது. காலம் அதிகரிக்கும்போது கவலைகளும் துயரங்களும் கூடுதலாகின்றன.

கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாகதமிழக சிறைகளில் வாடிக்கொண்டுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்காக இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் உங்களுடைய ஜகாத் மற்றும் ஸதக்கா போன்றவற்றை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலாக நிதி தேவைப்படுகின்றது என்பதையும் உங்கள்முன் வைக்கிறோம்.

ஆகையால், புனிதமிக்க ரமழானில் மாநபி காட்டித்தந்த மார்க்கம் வலியுறுத்துகின்ற அடிமையை விடுவித்தல் என்னும் மகத்தான் மார்க்கப் பணிக்காக உங்களுடைய பொருளாதாரத்தை அள்ளித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இதனை வல்ல அல்லாஹ் பன்மடங்காக உங்களுக்கு மறுமையில் திருப்பியளிப்பான்.
(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாமின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்குர்ஆன் 9-60)

இறைவேதம் குர்ஆனும் மாநபி மணிமொழிகளும் வலியுறுத்துகின்ற இறைவழிச் செலவான ‘அடிமைகளை விடுவித்தல்’ என்னும் உயர்பணிக்காக தங்களுடைய வரையறாது வாரி வழங்குமாறு சிறுபான்மை உதவி அறக்கட்டளை பணிவுடன் கேட்டு நிற்கின்றது.

அன்புடன்
கோவை தங்கப்பா
டிரஸ்டி
சிறுபான்மை உதவி அறக்கட்டளை
கோவை-1