Sunday, October 11, 2009

இறைவனின் திருப்பெயரால். . . .
அஸ்ஸலாமு அலைக்கும், (வரஹ்)

அன்புள்ள சமுதாயத்திற்கு,
சிறுபான்மை அறக்கட்டளையின் அன்பு மடல்.
உயர்நீதிமன்றத்தில் கோவை குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணை முடியும் தருவாயில் இடைக்கால உத்தரவாக இரண்டு இளம் சிறார்களான முஜிபுர் ரஹ்மான் அம்ஜத் அலி ஆகியோர்களை (இளம் சிறார்களான இவர்கள் மீது வழக்கு தொடுத்தது தவறு என) உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இது சி.டி.எம். அறக்கட்டளை மேற்கொண்ட சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறோம்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கீழ் கோர்ட்டில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகின்றது. தண்டிக்கப்பட்டவர்களான ஆயள் தண்டனை சிறைவாசிகளை எங்ஙனமாவது விடுதலை செய்து விடவேண்டுமென சி.டி.எம்.அறக்கட்டளை கடந்த இரண்டாண்டுகளாக சட்ட போராட்டம் மேற்கொள்வதற்கான பொருளாதாரம் ஈட்டுவதில் கடுமையாக களமிறங்கி பணி செய்தது. உயர்நீதிமன்றத்தில் மிகச் சிறந்த மூத்த வழக்கறிஞர்களான N. நடராஜன், கோபிநாத், சேவியர் ‡பிலிக்ஸ், ப. மோகன், திருமலைராஜன், ஜெயகுமார், அபூபக்கர் ஆகியோர்களை அறக்கட்டளை சார்பாக நியமித்தோம். வழக்கை முடித்து கொடுப்பதற்கான மொத்த செலவு 70 இலட்சம் என பேசி முடிக்கபட்டது. வழக்கு முடிவடைந்த இந்நிலையிலும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையில் மீதம் இன்னும் கொடுக்க வேண்டியுள்ளது சி.டி.எம்.அறக்கட்டளை தற்போது வழக்கறிஞர்களுக்கு கடன் பட்டுள்ளது. 70 இலட்சம் என்பது நம் சமுதாயத்தை பொறுத்தவரை ஒரு பெரிய தொகையே அல்ல.

மாவட்டத்திலுள்ள ஓரிரு செல்வந்தர்கள் தலா ஒரு இலட்சம் என்று கொடுத்து உதவினாலே இத்தொகை மிக சுலபமாக ஆகிவிடும். ஆனால், மாறாக இரண்டு ஆண்டுகாலமாக இத்தொகை சேமிக்க கடும் முயற்சி எடுக்க வேண்டியதாக போயிற்று. நிலைமை இப்படி இருந்த போதிலும் அல்லாஹ்வின் பேருதவியால் உள்ளூரிலும், வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் ஒரு சில நல்ல உள்ளங்கள் செய்திட்ட தூய்மையான பொருளாதார உதவியினால் இவ்வழக்கை எதிர் கொண்டதில் அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் இவ்விரு சகோதரர்கள் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு இருக்கின்றார்கள். (அல்ஹம்துலில்லாஹ்)

சிறையிலிருந்து விடுதலை பெற்றதிலே - பொருளாதார உதவி அளித்திட்ட அத்தனை பேருக்கும் இவர்களின் விடுதலையில் பங்களிப்புண்டு. அநியாயமாக 12 ஆண்டுகாலமாக சிறையில் அடைபட்டு, வதைபட்டு வறண்டுபோன இவ்வுள்ளங்கள் விடுதலையினால் அடையும் சந்தோசத்திற்கு ஒரு அளவுகோல் உண்டா?... இத்தகைய சந்தோசம் கிடைத்ததில் பொருளாதாரம் கொடுத்துதவிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் பங்குண்டு.

இவர்கள் அடைந்த சந்தோசத்தை போல் பொருளாதார உதவி செய்திட்டவர்களின் உள்ளங்களிலும் அவர்களின் குடும்பங்களிலும் மகிழ்ச்சியும் ஆனந்தத்தையும் வல்லான் அல்லாஹ் ஈருலகிலும் வாரி வழங்கிட வேண்டுமென அறக்கட்டளையின் சார்பாக பிரார்த்திக்கிறோம்.

இது போன்று இன்னும் எத்தனையோ சிறைவாசிகள் ஆண்டுகணக்கில் சிறையில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். அவர்களுக்கும் இத்தகைய மகிழ்ச்சி கிட்டிடவும் அவர்களின் மனைவி மக்களோடு அவர்கள் இணைந்திட வேண்டியும் தாங்கள் அனைவரும் மனம் உருகி பிரார்த்திக்க வேண்டும். இன்னும் இவ்வழக்கின் தீர்ப்பு ஓரிரு வாரங்களின் வழங்கி விடுவார்கள் தீர்ப்பு வரும் வரை உங்களின் கரங்கள் இவர்களின் விடுதலைக்காக உயர்ந்த வண்ணமே, மனங்கள் இறைஞ்சிய வண்ணமே. . .
அன்புடன்
சி .டி .எம் .
அறக்கட்டளை
கோவை-1